×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்


நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, நாகையை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மபாலன் (37). இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 13ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், சாமந்தான்பேட்டை ஆகிய ஊர்களை சேர்ந்த 10 பேர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் 10 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று, பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோல் கடந்த 13ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவ்வாறு மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Nagai ,Dharmapalan ,Nagai Akkaripet ,Dinakaran ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை